எங்களூரில் இருந்த வயதானவரான லூக்கோஸ் சேட்டனிடமிருந்துதான் டி.ஆர்.மகாலிங்கத்தைப்பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டேன். ஒருமுறை நான் சமகாலத் திரையிசை பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “இப்போதுள்ள பையன்கள் பாடுவதெல்லாம் தண்ணீர்ப் பாட்டுகள். நீயெல்லாம் தியாகராஜ பாகவதரும் டி.ஆர்.மகாலிங்கமும் பாடிய அசலான கர்நாடக சங்கீதப் பாடல்களைக் கேட்க வேண்டும்.” அவர்களின் சிலபாடல்களை அவர் நகல்செய்து பலவீனமாகப் பாடியும் காட்டினார். டி.ஆர்.மகாலிங்கத்தைத் தான் தன் கண்களாலேயே பார்த்தது உண்டு என்று சொல்லி சிறுவனான என்னை அவர் ஆச்சரியப்படுத்தினார். ஞான சௌந்தரி என்ற படத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்துக்காக அதன் கதாநாயகனான டி. ஆர்.மகாலிங்கம் கொச்சிக்கு வந்தபோதுதான் லூக்கோஸ் சேட்டன் அவரைப் பார்த்தாராம். 1948 ல் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் ஒரு கிறித்தவப் பக்திப்படம். மலையாளியான ஜோசஃப் தளியத் அதை இயக்கியிருந்தார். ஞான சௌந்தரியின் பாடல்கள் அக்காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் பெரும் புகழ்பெற்றிருந்தன. டி.ஆர்.மகாலிங்கம் கொச்சி பத்மா திரையரங்கில் கூட...