” திதாஷ்... கல்கத்தாவில் தானே இருக்கிறாய். அடிக்கடி சென்று ஷுரமாதி*யைப் பார்த்துக்கொள். தேவையான உதவிகளைச் செய். 93 வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவரது வீட்டுத் தொலைபேசியை யாருமே எடுப்பதில்லை. போனவாரம்கூட அழைத்திருந்தேன்” என்று அலைபேசியில் சொன்னேன். “ஐயோ சார்… உங்களுக்குத் தெரியாதா ? ஷுரமாதி இறந்துபோய் இரண்டு மாதம் ஆகிறதே” என்றாள் திதாஷ். தலையில் யாரோ ஓங்கி அறைந்ததுபோல் இருந்தது எனக்கு. அவள் சொன்னது ரித்விக் கட்டக்கின் மனைவி ஷுரமா கட்டக்கின் மரணம் குறித்து. பலநாட்களாக உடல்நலமற்று இருந்தார். வயதும் அதிகமாகியிருந்தது. ஆனால் ஒரு மகனைப்போல் என்னை நேசித்த ஷுரமாதியை இறுதியாக ஒருமுறை சென்று பார்க்க முடியவில்லையே! ஷுரமாதி இறந்த செய்தியை காலதாமதமாக எனக்கு வழங்கிய திதாஷ் 23 வயது மட்டுமேயான இளம்பெண். ரித்விக் கட்டக் நினைவு அறக்கட்டளை வழியாக எனக்கு அறிமுகமானவள். அவளது வித்தியாசமான பெயர் ரித்விக் கட்டக்கின் திரைப்படமான ‘திதாஷ் எக்தி நதிர் நாம்’ என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. திதாஷின் தாய் ரித்விக் கட்டக்கின் தீவிர ரசிகை. மகளுக்கு திதாஷ் என்றும் மகனுக்கு ரித்வ