அன்புள்ள பிரதாப் போத்தன் , எனக்கு பத்து வயதிருக்கும்போதுதான் நீங்கள் நடித்த முதல் திரைப்படம் ‘ஆரவம்’ வெளியானது. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த அதிசயப் படத்தைப் பார்த்தேன். ஆனால் தங்களது இரண்டாவது திரைப்படம் ‘தகரா’ வெளியான காலத்திலேயே பார்த்து விட்டேன். வயது வந்தவர்களுக்கு மட்டுமான அப்படத்தைப் பார்க்கும்போது எனக்குப் பதினோரு வயது! உங்களிடம் ஒருமுறை இதைச் சொன்னபோது ‘ பதினைந்து வயது மட்டுமேயிருந்த அப்படத்தின் கதாநாயகி சுரேகாவுக்கே படம் பார்க்க அனுமதி கிடைத்திருக்காதே ’ என்று அந்தப் பல்தெரியாச் சிரிப்பைச் சிரித்தீர்கள். அக்காலகட்டத்தின் ஓர் ஒழுக்க நடுக்கமாகவே மாறிய சுரேகாவின் காமக்கிளரச்சியூட்டும் காட்சிகளை விட நீங்கள் நடித்த மூளை வளர்ச்சி குன்றிய , அழுக்கனான கிராமத்து இளைஞன்தான் என்னைக் கவர்ந்தான் என்று உங்களிடம் சொன்னபோது ‘அது பொய்’ என்று சொல்லி மீண்டும் சிரித்தீர்கள். அப்பாத்திரத்தில் வந்தது நீங்களா என்று வியக்க வைக்குமளவில் இருந்தது , அதற்கு ஓரிரு மாதங்களில் வெளியான உங்களது முதல் தமிழ்ப்படம் ‘அழியாத கோலங்க’ளின் பாத்திரம். அவன் ஒரு நவநாகரீக இளைஞன். நீலவண்ண டெனிம் ஜீன்ஸ் , பெல் ப