மன்னா டேவைப் பாராட்டும் பொருட்டு திருவனந்தபுரத்தில் ஒரு இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வருடத்தின் ஜேசுதாஸ் விருது அவருக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி அது நடந்தது. அதில் மன்னா டே அவரது புகழ்பெற்ற சில ஹிந்தித் திரைப்பட பாடல்களைப் பாடத் தொடங்கினார். அவற்றில் பல அங்கிருந்தவர்கள் அதிகம் அறிந்திராத பாடல்கள். சில பாடல்கள் தாண்டியதும் அமைதியிழந்த கூட்டம் கூச்சலிட ஆரம்பித்தது. பாடுவதை நிறுத்தி, நல்ல பாடல்களை ரசிக்கும் திறனோ பாடகர்களை மதிக்கும் பண்போ இல்லாதவர்கள் என்று அவர்களை நோக்கிச் சீறிவிட்டு மன்னா டே கடும் சினத்துடன் அரங்கிலிருந்து இறங்கிச் சென்றார். அவர் விருதையும் ஏற்றுக்கொள்ளவில்லை பின்னர் ஒருமுறை கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவருடைய சில ஹிந்திப் பாடல்களுக்குப் பின்னணி இசையை உரிய முறையில் அமைக்க இசைக்கலைஞர்கள் திணறியபோது, சென்ற காலத்தின் மகத்தான அப்பாடல்கள் மீது அவர்கள் காட்டிய உதாசீனத்தை மேடையிலேயே கடுமையாகக் கண்டித்தார் மன்னா டே. மன்னா டே இந்தியா கண்ட மாபெரும் பாடகர்களில் ஒருவர். உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க இசைமேதை. நாடளாவிய புகழ் பெற்ற அக்கால பெரும் திரைப