ஒவ்யூர் அருங்கா பதினேழாவது வயதில் தனது வீட்டின் சுவரை அடித்து உடைத்தார்! வீட்டின் முக்கியமான தாங்குச் சுவர். வீடே கிட்டத்தட்ட சரிந்தது. தாய் தந்தையினர் திரும்பிவந்தபோது நிலநடுக்கத்தில் சிக்கியதுபோல் அந்த வீடு காட்சியளித்தது. என்ன நடந்தது என்ற கேள்விக்கு தனது ட்ரம்பெட்டின் (Trumpet) ஒலி அந்தச் சுவரில் இடித்து எதிரொலித்து முழங்கி இசையை தெளிவற்றதும் நாராசமானதும் ஆக்குவதால் வேறு வழியில்லாமல் உடைத்தேன் என்றுச் சாதாரணமாகச் சொன்னார்! வீட்டைச் சரிசெய்து அதில் முறையான ஒலி தடுப்பான்கள் அமைத்த ஒரு அறையை கட்டிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகினார்கள் ஒவ்யூரின் தாய் தந்தையினர். ஒவ்யூர் அருங்கா இன்று கென்யாவின் மிக முக்கியமான, உலகப்புகழ் பெற்ற ட்ரம்பெட் கருவியிசைக் கலைஞர். இசைக்கும் தொழில்நுட்பத்திற்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள் சில இசை நிபுணர்கள். இசை வியாபாரத்திற்கு தொழில்நுட்பம் தேவை ஆனால் இசைக்கு அது அறவே தேவையில்லை என்கிறார்கள். இந்தக் கருத்து சரியா, என்ன? ஒரு இசைக்கலைஞன் இசைக்கும் இசையின் தரம் ஒன்றுதான் என்றாலும் அதன் தொனியும் தரமும் அந்த இசை ஒலிக்கும் இடத்திற்கு தகுந்ததுபோல் ம